''சில்லரைத்தனமாக பேசாதீர்கள்''.. ஆதரவாளர்களுக்கு மோடி அறிவுரை
டெல்லி: பாஜகவின் நலம் விரும்பிகள் என்று கூறிக்கொள்பவர்கள் சில்லரைத்தனமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள் என்று நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு வீடுகளை விற்பனை செய்ய கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதும், மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப்போங்கள் என்று பாஜகவின் கிரிராஜ்சிங் கருத்து தெரிவித்ததும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சர்ச்சைகளுக்கு பாஜக பதிலளிக்காமல் இருந்து வந்தது. பதில் அளித்த தலைவர்கள் கூட தொகாடியா, கிரிராஜ் சிங்கை கண்டிக்காமல், விவகாரத்தை மூடி மறைக்கவே முயன்றனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனைகளுக்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த நரேந்திர மோடி இன்று தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளதாவது:
பொறுப்பற்றதனமான பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. அதுபோல பேசுபவர்களுக்கு நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோல இனிமேலாவது பேசாமல் இருங்கள் என்பதுதான்.
பாஜகவின் நலம் விரும்பிகள் என்று கூறிக்கொண்டு இதுபோல சில்லரைத்தனமாக பேசிக்கொண்டிருப்பது பிரச்சாரத்தின் போக்கை திசை திருப்பிவிடும்.
நாட்டில் தற்போது வளர்ச்சி, நல்ல ஆட்சி தொடர்பாகத்தான் விவாதம் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுபோன்ற பேச்சுக்கள் நல்ல விவாதத்தை விட்டுவிட்டு அனாவசியமாக விவகாரங்களை பூதாகரமாக்கிவிடும் என்று கூறியுள்ளார்.