சேத்து வெச்ச சொத்தைவிட மனிதாபிமானம் தான் காப்பாற்றும்... மும்பை மழை உணர்த்திய தத்துவமிது!
மும்பை: இயற்கை பேரழிவின் போது துளிர்க்கும் மனிதாபிமானமே மனிதனின் உயிரைக் காக்கும் தேவதைகளாக மாறுகின்றன, இதைத் தான் நேற்று பொளந்து கட்டிய மழையின் போது மும்பை வாசிகள் வெளிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2015ல் சென்னை மழையில் சிக்கியவர்களுக்கு தற்போது மும்பையில் இருக்கும் நிலவரத்தை எளிதில் உணர முடியும். ஒரே இரவில் அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றிக் கொண்ட வெள்ளநீர் வடிய ஒரு வாரமானது. இந்த ஒரு வாரத்தில் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், உணவு, தண்ணீர் கிடைக்காமல் அல்லோகல்லப்பட்டு விட்டோம்.
சென்னை மழையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு இஸ்லாமிய இளைஞர் உதவியது, இக்கட்டான சூழலில் அவர் நீட்டிய ஆதரவுக் கரத்தால் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறக்கு அந்த குழந்தைக்கு உதவியவரின் பெயரையே சூட்டி பெருமைப்படுத்தினர் பெற்றோர்.
9 மடங்கு அதிக மழை
தற்போது மும்பையிலும் இதே போன்றதொரு நிலைமை தான் இருக்கிறது. பரபரப்பாக வாகனங்கள் பறந்து செல்லும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் போக்குவரத்து வசதி கிடைக்காமல் அல்லாடுகின்றனர். சராசரியை விட 9 மடங்கு அதிக மழை நேற்று ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விட்டதாக வானிலை மையம் கூறுகிறது.
நண்பர்கள் வீடுகளில் தஞ்சம்
இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு செல்ல முடியாத பலர் அலுவலகங்களிலேயே தஞ்சமடைந்தனர். பிற்பகலுக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சிலர் அலுவலகங்களிலேயே இருந்ததால் இரவு வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பலர் நண்பர்கள் வீடுகளிலும், தெரிந்தவர்கள் வீடுகளிலும் தங்கினர்.
உறவினர் அலுவலகத்தில் அடைக்கலம்
சர்ச்கேட்டில் இருக்கும் தன்னடைய அலுவலகத்திலிருந்து நேற்று பிற்பகல் வீடு திரும்பியிருக்கிறார் ஒரு ஊழியர், ஆனால் ரயில் பாதியிலேயே நின்றுவிட வெள்ள நீரில் நடந்து வந்து அதற்கு மேல் எங்கும் செல்ல முடியாது என்ற சூழலில் உறவினரின் அலுவலகத்தில் தஞ்சமடைந்ததாக நிலைமையை விவரிக்கிறார்.
இருக்கும் இடத்தில் இருப்பதே பாதுகாப்பு
பணிக்கு சென்றிருந்த பெண்களை அவர்களது பெற்றோர் கடுமையான மழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் பாதுகாப்பாக அலுவலகத்திலேயே இருக்கும்படி கூறிவிட்டதாகக் கூறுகின்றனர் இளம்பெண்கள். பகல் 12.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண் ஊழியர் ஒருவர் 3 மணி நேரமாக காத்திருந்துவிட்டு பின்னர், இது ஆபத்து என்பதை உணர்ந்து மீண்டும் அலுவலகத்திற்கே சென்றுவிட்டதாகக் கூறுகிறார்.