கர்நாடக வேட்பாளர்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு... தேர்தல் ஆணையம் முடிவு
பெங்களூர்: லோக்சபா தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் 16வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வேட்பாளர்கள் வழங்கிடா வண்ணம் தீவிர வாகனச் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக வேட்பாளர்களின் வீடுகளை தீவிரமாகக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, கர்நாடகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப் பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் வேட்பாளர்களின் வீடுகளின் மையப்பகுதியில் பொருத்தப் பட உள்ளன. இதன்மூலம் வேட்பாளர்களின் வீட்டுக்கு வந்து செல்பவர்களை தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் வேட்பாளர்கள் பரிசு பொருட்கள் பெறுவது, வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிடுவது போன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அனுமந்தப்பா, பாஜ வேட்பாளர் ஸ்ரீராமுலு ஆகியோர் வீடுகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.