துப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த கூச் பிகார் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்குள்ள கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.. இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.இந்த சம்பவத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எஃப்) காரணம் என்று கூறி மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில்.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது இதுக்குதான் தேர்தல் ஆணையம் விளக்கம்!
மம்தா வன்முறையை தூண்டி விடுகிறார் என்று பிரதமர் மோடி அவருக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் உள்ளூர் மக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சி.ஐ.எஸ்.எஃப் படையினர் வேறுவழியின்றி அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
கூச் பிகார் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அந்த மாவட்டத்திற்குள் அடுத்த 3 நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், ஏப்ரல் 17-ம்தேதி நடைபெற உள்ள 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசார நாட்களையும் குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கூச் பிகார் மாவட்டத்திற்கு செல்வதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.