அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்
கொல்கத்தா: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய விநோத சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
சுப்ரதீப் குஹா என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து மேற்கு வங்கத்தில் காடுகளில் இருந்து விலங்குகள், பறவைகளை கடத்தி விற்பனை செய்து வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்தும் இருக்க்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத் துறை. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்ரதீத் குஹா மீது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை அவரது சொத்துகளான 3 சிம்பன்சிகள், 4 நீளவால் குரங்களையும் (தென் அமெரிக்கா குரங்குகள்) கைப்பற்றியது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ81 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்கு ஒன்றுக்கு ரூ25 லட்சம் எனவும் நீளவால் குரங்கு ஒன்றுக்கு ரூ1.5 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அலிப்பூர் பூங்காவில் இந்த குரங்குகளைப் பார்வையிடுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்தும் செல்கின்றனர். அமலாக்கத்துறையினர் இதுவரை தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் என எத்தனையோ பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
அமலாக்கத்துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக விலங்குகளை சொத்துகளின் பட்டியலில் சேர்த்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications