ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!
டெல்லி: விவிஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் முதன்முறையாக கைது நடவடிக்கையை இன்று மேற்கொண்டது.
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும். இதில் உயர் அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்ததாகவும், ஊழல் மதிப்பு ரூ.360 கோடி எனவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முதலாவது கைது நடவடிக்கையை அமலாக்க இயக்குநரகம் இன்று எடுத்துள்ளது. ஊழலில் தொடர்புள்ளதாக தொழிலதிபர் கவுதம் கெய்தான் என்பவரை அமலாக்க துறை இன்று கைது செய்துல்ளது.
கெய்தான் சண்டீகரை சேர்ந்த ஏரோமாட்ரிக்ஸ் நிறுவன முன்னாள் போர்டு உறுப்பினராகும். ஹெலிகாப்டர் ஊழலில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றியதாக தெரியவந்ததையடுத்து இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.