உ.பி. முன்னாள் அமைச்சரின் ரூ.200 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கப்பிரிவு அதிரடி
லக்னோ: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சரின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஆட்சி காலத்தில் சுகாதாரத் அமைச்சராக இருந்தவர் பாபு சிங் குஷ்வாஹா. இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் ஊழல் செய்து, சொத்துகள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பாபு சிங் குஷ்வாஹா மீது மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் அவருடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஊரக சுகாதார திட்ட ஊழல் விவகாரத்தில், குஷ்வாஹா மீதும், வேறு சிலர் மீதும் மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
அது மட்டுமின்றி குஷ்வாஹாவின் ரூ.60 கோடி சொத்துகளை மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஏற்கனவே முடக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.