பிஜாப்பூரில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் 'ரோபோ மணிகண்டன்'
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமியை ரோபோ உதவியுடன் மீட்பதற்காக மதுரையில் இருந்து மணிகண்டன் வரவழைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் நாகத்தானா கிராமத்தை சேர்ந்த ஹனமந்த் பாட்டீல் மகள் அக்ஷதா (4). சிறுமியின் தந்தையும், தாயும் கூலி வேலை செய்து வருகிறார்கள். நேற்றிரவு, அக்ஷதா போர்வெல் கிணறு அமைக்கப்பட்டுவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று அவளை துரத்தியதாக கூறப்படுகிறது.
நாய்க்கு பயந்து அக்ஷயா அங்குமிங்கும் ஓடியபோது, திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டாள். இதையறிந்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நேற்றிரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். மின்வெட்டு காரணமாக மீட்பு பணிகள் நேற்றிரவு 11 மணிக்குதான் துவங்கியுள்ளன. குழந்தை தலைகீழாக விழுந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
300 அடி தோண்டியும் தண்ணீர்வராததால் இந்த போர்வெல்லை தோட்ட உரிமையாளர் மூட முயற்சி செய்துள்ளார். அதில் 60 அடி ஆழம்வரை மூடப்பட்டுள்ளது. இதில்தான் சிறுமி விழுந்துள்ளாள். ஆனால் 28 முதல் 30 அடி ஆழத்தில், நடுவேயிருந்த மண், மரக்கட்டைகளில் சிக்கி குழந்தை அடி ஆழம்வரை போகவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே போர்வெல் அருகே சுமார் 35 அடி ஆழத்தில் மற்றொரு குழி தோண்டி குழந்தை அதன்வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புனேயிலிருந்து தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளும் அங்கு குழுமியுள்ளனர். சிறுமிக்கு குழாய் மூலமாக ஆக்ஜிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சங்கரன்கோயிலில் குழந்தையை பத்திரமாக மீட்ட ரோபோ குழுவை சேர்ந்த மணிகண்டனுக்கு மீட்பு படையினர் தகவல் கொடுத்து பிஜாப்பூர் வருமாறு கேட்டுக்கொண்டனர். அழைப்பையேற்று, பெங்களூர் வந்த மணிகண்டனை அங்கிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஜாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவந்தனர்.
அதிநவீன காமிராக்களை போர்வெல் உள்ளே விட்டு குழந்தையின் நிலைமையை கண்காணித்துவருகிறார் மணிகண்டன். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் 400 அடி பள்ளத்தில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டுக்கொடுத்தவர். இதுகுறித்து 'ஒன்இந்தியா'விடம் மணிகண்டன் கூறுகையில், "திருவண்ணாமலை உள்ளிட்ட சில இடங்களில் குழந்தைகள் போர்வெல்லுக்குள் சிக்கியபோது எனக்கு மிகவும் தாமதமாக தகவல் தந்தார்கள். இதனால் அங்கு குழந்தைகளை காப்பாற்ற முடியாமல்போனது. ஆனால் சங்கரன்கோயிலில் உடனே தகவல் அளித்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது. இந்த கருவியை தயார் செய்ய ரூ.50 ஆயிரம்தான் செலவாகும். எனவே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இதுபோன்ற ரோபோவை அளித்தால் போர்வெல்லில் விழுந்த குழந்தைகளை உயிரோடு காப்பாற்றிவிடலாம்" என்றார்.
இதனிடையே, சிறுமி அக்ஷதா நலமுடன் திரும்பி வர வேண்டும் என்பதற்காக கர்நாடகா முழுவதிலும் கோயில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்திருந்தன.