தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இரண்டு கோஷ்டிக்கும் அழைப்பு!
மின்னணு ஓட்டு எந்திரங்கள் சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இரு அணிகளும் அழைக்கப்பட்டுள்ளன.
டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் நடப்பதில்லை என்பதை அனைத்து கட்சியினருக்கும் விளக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இருஅணிகளும் அழைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது, இதில் நம்பகத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றதற்கு மின்னணு வாக்குப்பதிவு கோளாறுகளே காரணம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் குற்றஞ்சாட்டினர்.
ஆம்ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக டெல்லி சட்டசபையில் நிரூபத்துக் காண்பித்தார். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, இது குறித்து அனைத்து கட்சியினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் குறித்தும், ஒருவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப்பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் குறித்தும் விளக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் அடங்கிய 55 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
ஒவ்வொரு கட்சியின் சார்பில் தலா 3 மூத்த பிரதிநிதகள் பங்கேற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில் எந்த அணிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இரண்டு கோஷ்டிக்கும் அழைப்பு
இந்நிலையில் அதிமுகவின் அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டு கோஷ்டியும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
சின்னம் நிரந்தர முடக்கமா?
அதிமுகவின் கட்சியும் சின்னமும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி இரண்டில் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி வாய்ப்பாக கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவிற்காக காத்திருக்கின்றனர். தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இரண்டு கோஷ்டியையும் அழைத்துள்ளது ஆணையம். இதனால் ஜுன் 16ம் தேதி அதிமுக சின்ன விவகார விசாரணையின் போது ஒரு வேளை கட்சியின் பெயரம் சின்னமும் நிந்தரமாக முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அதிமுகவினர்.