கால் நூற்றாண்டுக்கு பிறகு, கடுமையான மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கிறது பெங்களூர்
பெங்களூர்: ஏற்கனவே மின்வெட்டால் தவித்துப்போயுள்ள பெங்களூர் நகரம் மேலும் மோசமான மின்வெட்டை சந்திக்க உள்ளது. காரணம், போதிய மழையின்மையும், மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் பழுதுகளும்தான்.
கர்நாடகாவில் இவ்வாண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது. இந்த பிரச்சினையோடு இப்போது மின்வெட்டும் சேர்ந்து கொண்டு மக்களை வாட்டி வருகிறது.
அணைகளில் நீர் குறைவாக இருப்பதால், புனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்தது இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனிடையே அனல் மின் நிலையங்களி்ல் பழுது காரணமாகவும், மின் உற்பத்தி குறைந்துள்ளதாம்.
தற்போதைய நிலையில் தினமும் 2600 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. கர்நாடகாவிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் தினமும் 9736.6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், புதன்கிழமை இரவு இது 4700 மெகாவாட் என மிக மோசமாக சரிந்தது. கிட்டத்தட்ட 50 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கோடை காலம் உச்சமடையும்போது மின்வெட்டும், தண்ணீர் பிரச்சினையும் இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. 25 வருட காலத்தில் முதல்முறையாக பெங்களூர் மிக மோசமான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட உள்ளது என எச்சரிக்கிறார்கள்.