காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு அதிரடி தடை விதித்தது ஹைகோர்ட்- எதிர்ப்பு தெரிவித்து 'பந்த்"
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம். ஆனால் இத்தடைக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாத இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் பரிம்கோஷ் சேத் என்ற வழக்கறிஞர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பசுக்களை இறைச்சிக்காக கொல்லுதல் குற்றவியல் சட்டம் 298-ஏ மற்றும் பி-ன் கீழ் தண்டனைக்குரியது. எனவே காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் திரஜ் சிங் தாகூர், ஜனக்ராஜ் கோத்வால் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்குமாறும் இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆஜரான மாநில போலீஸ் டிஜி.பி., மாட்டு இறைச்சி விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
தடைக்கு எதிராக பந்த்
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications