4 மாதங்களில் பெங்களூர் முழுவதும் இலவச வை-பை!
பெங்களூர்: பெங்களூரின் அனைத்து பகுதிகளிலும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் அரசு இலவச 'வை-பை' இணையதள வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான்வேலி, நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்றெல்லாம் அழைக்கப்படுவது, பெங்களூர். அந்த பெயருக்கேற்ப தகவல் தொழில்நுட்ப வசதிகளை சாமானிய மக்களும் அனுபவிக்க அரசு வசதி செய்து கொடுத்து வருகிறது. 'வை-பை' இணையதள வசதி தற்போது, பெங்களூரின் எம்ஜிரோடு, இந்திராநகர் சிஎம்ஹெச் ரோடு மற்றும் 100 அடி ரோடு ஜங்ஷன், யஸ்வந்த்பூர் பஸ் நிலையம், கோரமங்களா மற்றும் சாந்திநகர் பஸ் நிலையங்களில் இலவசமாக கிடைக்கிறது. மாநில தகவல் தொழில்நுட்ப துறை இந்த வசதியை மேற்கண்ட இடங்களில் கடந்த ஜனவரி முதல் அளித்து வருகிறது.
இதுபோன்ற இலவச 'வை-பை' வசதியை இரண்டாம்கட்ட நகரங்களான மைசூர், மங்களூர், ஹூப்ளி, பாகல்கோட்டை ஆகியவற்றிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஐடி-பிடி அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதேபோல இன்னும் நான்கு மாதங்களில் பெங்களூரின் அனைத்து ஏரியாக்களிலும் இலவச 'வை-பை' சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
'நம்ம வை-பை' என்று இத்திட்டத்திற்கு பெயர். தற்போது பெங்களூரில் 'வை-பை' சேவை அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். நகரின் அனைத்து பகுதிக்கும் இந்த சேவை விரிவடையும்போது தடையில்லா 'வை-பை' இணைப்பு கிடைக்கும் என்பதால் பயனாளிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்துதான் சென்னை, நெல்லை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கான தொலைதூர பேருந்துகள் கிளம்புகின்றன. எனவே இங்கு வந்து பஸ்சுக்கு காத்திருக்கும் தமிழக பயணிகளுக்கு இலவச 'வை-பை' வசதி பயனுள்ளதாக உள்ளது. இச்சேவையை பெற, 'நம்ம வை-பை' சேவை கிடைக்கும் பகுதிகளுக்கு செல்லும்போது, நாம் பயன்படுத்தும் செல்போன் எண்ணை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அந்த எண்ணுக்கு 'வை-பை'க்கான பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.