மோடி பதவியேற்பு விழா..நவாஸ் ஷெரீப் பங்கேற்பதில் பாக்., ராணுவம் அதிருப்தி?
டெல்லி: நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதற்கு அந்நாட்டு ராணுவம் அதிருப்தி தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வருகின்ற 26 ஆம் தேதி நடக்க உள்ள கோலாகல விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.

இந்த விழாவில் தெற்காசிய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சா, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலமும் வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது.
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப் இந்தியா வருகை தர விரும்பினாலும் கூட அந்நாட்டு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக அந்நாட்டு ராணு அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழா அழைப்பை நவாஸ் ஷெரீப் ஏற்காமல் புறக்கணித்தால், அது இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடும். அதை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு வந்தால் அது பாகிஸ்தான் மதவாதிகளிடையே எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் என கூறினார்.
இந்த விவகாரத்தில் நேற்று மாலைக்குள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு எடுத்து அறிவித்து விடுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் கூறின. ஆனால் அதன்படி அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதில் இன்று முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என நேற்று இரவு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications