கேரளா அரசின் பார்களை மூடும் உத்தரவுக்கு நாளை வரை சுப்ரீம் கோர்ட் தடை!
கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை எட்டுவதற்காக மது விற்பனை கடைகள் மற்றும் பார்களுக்கான உரிமங்களை அம்மாநில அரசு படிப்படியாக ரத்து செய்து வருகிறது.
முதல் கட்டமாக நூற்றுக்கணக்கான பார்களுக்கான உரிமங்களை கேரள அரசு ரத்து செய்தது. அரசின் இந்த முடிவால் 700 க்கும் அதிகமான பார்கள், நாளை மறுநாளுடன் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து கேரள பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான பெஞ்ச், பார் உரிமங்களை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு நாளை வரை தற்காலிக தடை விதித்தனர். அத்துடன் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும் பார் நடத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இது விஷயத்தில் கேரளா அரசின் கொள்கை என்ன என்பதை நாளை தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.