அம்மாவுடன் மோடி இருந்த படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது… பேஸ்புக் சிஓஓ
டெல்லி: உலகிலேயே பேஸ்புக்கில் பிரபலமான அரசியல் தலைவர்களில் 2வது இடத்தில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் தனது தாயாருடன் அமர்ந்து பேசுவது போன்ற பேஸ்புக்கில் இடம் பெற்ற படம்தான் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று பேஸ்புக் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சான்ட்பெர்க் கூறியுள்ளார்.
மோடிக்கு பேஸ்புக்கில் 1.8 கோடி நட்புகள் இருப்பதாக கூறியுள்ள சான்ட்பெர்க், முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்க அதிபர் ஒபாமா என்றும் அவருக்கு 4 கோடி நண்பர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள சான்ட்பெர்க் மோடியை நாளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மோடி குறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலிருந்து...
மோடியும் அம்மாவும்…
பிரதமர் மோடி தனது தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம்தான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனது தனிப்பட்ட விருப்பப் படமும் அதுதான். அபாரமான புகைப்படம் அது.
இந்திய அரசியல்வாதிகளின் புரிதல்
இந்திய அரசியல் தலைவர்கள், சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் குறித்து எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
மக்களுடன் நேரடியாகப் பேச நல்ல வாய்ப்பு
பேஸ்புக் மூலமாக அரசியல் தலைவர்கள் தங்களது வாக்காளர்கள், மக்களுடன் நேரடியாக பேச நல்ல வாய்ப்பாகும். இதை சமீபத்திய இந்திய பொதுத் தேர்தல் நிரூபித்துள்ளது.
2வது இடத்தில் இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியர்கள்தான் அதிக அளவில் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதாவது 10 கோடி இந்தியர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
பேஸ்புக்கின் சந்தையாகிறது இந்தியா
விரைவில் பேஸ்புக்கின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா மாறவுள்ளது. இங்கு பேஸ்புக்கிற்கான ஆதரவு அபரிமிதமாக உள்ளது. பேஸ்புக்கைப் பயன்படுத்துவோர் அதை சீரியஸாக பயன்படுத்துகின்றனர்.
பேஸ்புக்கில் வன்முறைக்கு இடமில்லை
பேஸ்புக்கில் வன்முறைக்கு இடம் இல்லை. பேஸ்புக்கில் பரிமாறப்படும் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டக் கூடாது. அதை பேஸ்புக் விரும்பாது.
போலிகளைக் களைய பாடுபடுகிறோம்
போலியான ஐடிகளுடன் பேஸ்புக்கில் வலம் வருவோரைத் தடுக்க கடுமையாக முயற்சித்து வருகிறோம் என்றார் சான்ட்பெர்க்.