சொத்துக்காக 19 வயது பெண்ணை சித்திரவதைக்குள்ளாக்கிய தந்தையும், சித்தியும்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயால் சொத்துக்காக 19 வயது இளம்பெண் சித்ரவதைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ரமேஷ் -சரளா தம்பதியினரின் ஒரே மகள் பிரதியுஷா. கருத்து வேறுபாடால் இந்தத் தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கணவரைப் பிரிந்த சில வருடங்களிலேயே சரளா தற்கொலை செய்து கொண்டார். இதனால், பிரதியுஷா மீண்டும் ரமேஷிடம் வந்து சேர்ந்தார்.
இதற்கிடையே, சியாமளா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரமேஷ்.
பிரதியுஷாவின் பெயரில் பத்மரோநகரில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்று உள்ளது. இது பிரதியுஷாவின் 18 வயதிற்குப் பிறகு அவரது திருமணத்தின் போது அவருக்கு உரிமையாகும் வகையில் உயில் எழுதப் பட்டிருந்தது.
இந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்துள்ளார் சியாமளா. இதற்காக பிரதியுஷாவின் தாய் வழி உறவினர்களை அவரைச் சந்திக்க விடாமல் தடுத்துள்ளார். அதோடு பிரதியுஷாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். சியாமளாவின் இந்த செயல்களுக்கு அவரது கணவர் ரமேஷும் உடந்தையாக இருந்துள்ளார்.
பிரதியுஷா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார் சியாமளா. மேலும், உணவு அளிக்காமலும் பிரதியுஷாவை அவர் சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தற்கொலை செய்து கொள் என பிரதியுஷாவை அவர் தூண்டியுள்ளார்.
இந்நிலையில், பிரதியுஷாவின் நிலை குறித்து தகவல் அறிந்த தொண்டு நிறுவனத்தார் எல்பி நகர் போலீஸ் உதவியுடன் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்கொலைக்கு தூண்டியது, சித்ரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சியாமளாவைப் போலீசார் கைதுச் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ரமேஷையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.