முஸ்லீம்களை பிடிக்கும்.. இந்த ஒரு வார்த்தைக்காக இளம் பெண் உயிரை 'குடித்த' இந்துத்துவா நபர்கள்!
Recommended Video

பெங்களூர்: முஸ்லீம்களை பிடிக்கும் என வாட்ஸ்அப் சாட்டிங்கில் கருத்து தெரிவித்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு, இந்துத்துவா நபர்களால், தள்ளப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூர் (தென் கனரா), உடுப்பி போன்ற கடலோர மாவட்டங்களும், சிக்மகளூர், ஷிமோகா போன்ற மலை மாவட்டங்களும் மதக் கலவரங்களுக்கு பெயர் பெற்றவை.
இங்கு இந்து, முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியே நின்று பேசக்கூட முடியாத நிலை உள்ளது.

வாட்ஸ்அப் சாட்
இப்படிப்பட்ட நீருபூத்த நெருப்பாக உள்ள ஒரு பகுதியில்தான் இளம் பூ ஒன்று கருகியுள்ளது. சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்ற பகுதியை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20). இவர் தனது தோழன் சந்தோஷ் என்பவரிடம் வாட்ஸ்அப் சாட்டில் பேசிய ஒரு வார்த்தை இன்று அவர் உயிரையே பறிக்கும் அளவுக்கு போய்விட்டது. ஆம்.. சந்தோஷிடம், எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என வாட்ஸ்அப்பில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை, தன்யாஸ்ரீ உயிரை குடித்துவிட்டது.

முஸ்லிம்களை பிடிக்குமே
வாட்ஸ்அப்பில் தங்கள் மாவட்டத்திலுள்ள மத கலவர நிலை குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார் தன்யாஸ்ரீ. சந்தோஷோ, அதுபோன்ற நிலை இருப்பது நல்லதுதான், அல்லது லவ் ஜிகாத் அதிகமாகிவிடுகிறது என தன்யாஸ்ரீக்கு பதில் அனுப்பியுள்ளார். ஆனால் தன்யாஸ்ரீ இதை ஏற்கவில்லை. எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் (I
love Muslims) என்று மெசேஜ் அனுப்பினார். இதை பார்த்த சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது. நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என அட்வைஸ் செய்துள்ளார்.

ஊருக்கெல்லாம் அனுப்பிய துரோகி
இத்தோடு விடவில்லை, சந்தோஷ். இந்த பர்சனல் சாட் விவரத்தை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து, "இதோ பார்ரா இந்த பொண்ணு, முஸ்லிம்களை லவ் பண்ணுது" என்ற தொனியில் தனது நண்பர்கள் குரூப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப்பில் இதை அனுப்பி வைத்துள்ளார். சந்தோஷ் செய்த பெரும் துரோகம் இதுதான்.

நேரில் மிரட்டல்
இதன்பிறகு நடந்தது அனைத்துமே மோசமானவைதான். பாஜக இளைஞர் பிரிவு தலைவர் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் சமீபத்தில் தன்யாஸ்ரீ வீட்டுக்கே போய், தாய் முன்னிலையில் அவரை திட்டி தீர்த்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற பழக்க வழக்கம் இருக்க கூடாது என கத்திவிட்டு சென்றுள்ளனர். மேலும் சிலர் தன்யாஸ்ரீ படத்தையும் வேறு மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

தற்கொலை செய்த இளம் பெண்
இதனால் மனமுடைந்த தன்யாஸ்ரீ தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில், தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்வதாக தன்யாஸ்ரீ கூறியிருந்தார். தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்யாஸ்ரீ கூறியிருந்தார். இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் நால்வரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications