வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்
காஜியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 32ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைப்பேசி வாயிலாக நேற்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராகேஷ் டிக்கிட்டின் உதவியாளர் கவுசாம்பி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஞானேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கொலை மிரட்டல் காரணமாக விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் காவல் துறையின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டிசம்பர் 29-ல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அறிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications