பிரதமர் சந்திக்காதது ஏன்.. நாங்கள் தீண்டத்தகாதவர்களா.. 2ம் தர குடிமக்களா.. அய்யாகண்ணு காட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஏன் பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்று விவசாயி அய்யாகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் என்ன 2ம் தர குடிமக்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தற்காலிகமாக போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
எனினும் தங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு மேலும் கூறியதாவது:
திரும்ப மாட்டோம்
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சை நாங்கள் மதிக்கின்றோம். அவர் எங்களை தமிழகத்திற்கு திரும்பி போகச் சொன்னார். ஆனால் நாங்கள் எத்தனை நாட்களானாலும் வெற்றியோடுதான் தமிழகம் செல்லுவோம். அதுவரை இங்குதான் இருப்போம். எங்களுக்கு வேறு வழியில்லை.
தீண்டத்தகாதவர்களா?
இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சொல்லப்படுகின்ற விவசாயிகளை, பிரதமர் சந்திக்க மாட்டேன் என்று சொல்லுவதோ நிதி அமைச்சர் சந்திக்க மாட்டேன் என்று சொல்லுவதோ சரியா.. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா? நாங்கள் கேவலமானவர்களா? தீண்டத்தகாதவர்களா?
கார்ப்பரேட் நாடா?
எங்கள் பெண்களின் தாலி எல்லாம் அடகு கடையில் கிடக்கிறதே.. தாலிக் கொடி ஏலத்திற்கு போகுகிறது. இது விவசாயிகளின் நாடா அல்லது கார்ப்பரேட் கம்பனிகளின் நாடா? என்பதை பிரதமர் மோடி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளை அவர் சந்திக்கவில்லை என்றால் இது விவசாய நாடல்ல.
உறுதி
வறட்சி நிவாரணம் அளிக்கிறேன். கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று பிரதமர் சொன்னாலே நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்களுக்கு உரிய பதில் அளித்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து தமிழகம் திரும்புவோம். அதுவரை டெல்லியில்தான் இருப்போம் என்று அய்யாகண்ணு உறுதிபடத் தெரிவித்தார்.