பஞ்சாப்பில் தீ மிதி குழியில் விழுந்த 6 வயது சிறுவன்... தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் 6 வயது சிறுவன் தீயில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நேற்றிரவு தீ மிதி விழா நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒரு வார காலமாக விரதம் இருந்து தீ மிதி சடங்கில் கலந்து கொண்டனர்.
தீ மிதி விழாவில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் தனது 6 வயது மகன் கார்த்திக்குடன் தீ மிதித்தார். தீயில் நடந்து சென்று கொண்டிருந்த அவர், திடீரென நிலைதடுமாறி தனது மகனை தவறவிட்டுவிட்டார். சிறுவன் தீயில் விழுந்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர்களை அங்குள்ள பாஜக எம்எல்ஏ மனோரஞ்சன் என்பவர், அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனுக்கு 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தைக்கு 20-25 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக ரூ.10000 வழங்கியிருக்கிறேன் என்று கூறினார்.