வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்... நள்ளிரவு வரை தாக்கல் செய்யலாம்!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 இன்றே கடைசி நாள் என்பதால் நள்ளிரவு வரை அலுவலகம் செயல்படும்.
டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், ஆகஸ்ட் 5 இன்றுடன் நிறைவடைகின்றது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள வருமான வரி அலுவலகங்களில் வருமான வரி படிவங்களை நேரில் தாக்கல் செய்வோருக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக வருமான வரித்துறை அலுவலகங்களில் கூடுதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. எனினும் வரி தாக்கல் செய்வோர் கடைசி நேரத்தில் வரி தாக்கல் செய்ய வந்தனர்.
கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது.
இதனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக வருமான வரித் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் வருமான வரித் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைகிறது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், நள்ளிரவு 12 மணி வரை வருமானவரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளோர், மின்னணு முறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வரும் நிலையில், நாடு முழுவதும் இன்று நள்ளிரவு வரை வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications