ஆருஷி கொலை வழக்கு திரைப்படமாகிறது: ரூ.5 கோடி தரத் தயாராகும் ஹாலிவுட் இயக்குநர்
காசியாபாத்: நொய்டா சிறுமி ஆருஷி கொலை வழக்கினை புத்தகமாக எழுதவும், திரைப்படமாக எடுக்கவும் முன்வந்துள்ளார் ஹாலிவுட் இயக்குநர் ஒருவர். இதற்காக ரூ. 5 கோடி ராயல்டி தரவும் அவர் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது பிணமும் கண்டுபிடிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இரட்டை கொலை வழக்கு
ஆருஷி- ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. 2012-ம் ஆண்டு மே மாதம், ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களையும் அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
கவுரவக்கொலை
ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் இருவரும் படுக்கை அறையில் தகாத முறையில் காணப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் தல்வார் ஜோடி கொன்றனர் என்று சி.பி.ஐ. உறுதிபடக் கூறியது.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தூக்குதண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோர் தாஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
பேப்பர் படிப்பதில்லை
சிறையில் தல்வார், கைதிகளுக்கு பற்களின் பாதுகாப்பு பற்றி டிப்ஸ் அளிக்கிறாராம். பேப்பர்களை படிப்பதில்லையாம். டிவியிலும் செய்தி சேனல்களை பார்ப்பதில்லை. அதே சமயம் ஆன்மீக சேனல்களைத்தான் பார்க்கின்றனராம்.
ஹாலிவுட் படமாகிறது
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிளப் எஃப். ருண்யார்ட் வியாழனன்று தாஸ்னா சிறைக்கு வந்து ஆருஷியின் பெற்றோரை சந்திக்க மனு அளித்தார். இந்த கொலை வழக்கை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக டாக்டர் தம்பதியரை சந்திக்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் கூறினார்.
ரூ. 5 கோடி ராயல்டி
இவர் பிரபல எழுத்தாளரும் ஆவார். ஆருஷி கொலை வழக்கினை புத்தகமாக எழுதி பின்னர் அதனை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ராயல்டியாக ரூ.5 கோடி தரத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இயக்குநருக்கு அனுமதி அளிக்க மறுத்த சிறை அதிகாரிகள் சட்டப்படி இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் டாக்டர் தம்பதியை சந்திக்க முடியும் என தெரிவித்து அந்த இயக்குனரை திருப்பி அனுப்பி விட்டனராம்.