இலங்கை கடற்படை கைது செய்த 46 மீனவர்கள் மீட்பு- இன்று தமிழகம் வருகை
டெல்லி: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 46 பேர் இன்று தமிழகம் வந்தடைய இருக்கின்றார்கள்.
கடந்த 18 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 46 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை 11 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார்.
அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அதன்படி, இலங்கையில் உள்ள இந்தியத்தூதர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று மாலை 24 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் விடுவிக்கப்பட்டன.
அவர்கள் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் 22 மீனவர்கள் மற்றும் படகுகள் இன்று மன்னாரை வந்தடைய இருக்கின்றார்கள்.
இன்று மாலையே 46 மீனவர்களும் படகுகளுடன் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.