வட மாநிலங்களில் கனமழை... கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: மக்கள் தவிப்பு
கேதார்நாத்: வட மாநிலங்களில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக 30 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், பிகார், உத்தரகண்ட், அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நதிகளில் வெள்ளம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரப்தி நதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காக்ரா, சரயு நதிகளிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
9 மாவட்டங்கள் பாதிப்பு
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அங்குள்ள பஹ்ராய்ச், பல்ராம்பூர், கோண்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 28 பேர் பலியானதாகவும், 1,500 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
200 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்
"பஹ்ராய்ச் மாவட்டத்தில் மட்டும் 202 கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. அங்கு மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி ராணுவத்திடம் கேட்டுள்ளோம். ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் 117 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
2.5 லட்சம் மக்கள் பாதிப்பு
பஹ்ராய்ச் மாவட்டத்தில் 250 வீடுகள் இடிந்து விழுந்தன. 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக ஏராளமான சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் போக்குவரத்தும் முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளன.
பிகார் மாநிலம்
பிகாரில் தர்பங்கா, நாளந்தா, மேற்கு சம்பாரண், சுபால், சஹார்சா, நவாடா, ஷேக்புரா, சீதாமரி, பாட்னா ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக அங்குள்ள நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் 4 லட்சம் மக்கள்
இந்த மாவட்டங்களில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
மீட்புப்பணி தீவிரம்
வெள்ளத்தில் சிக்கிய 38,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நாளந்தா மாவட்டத்தில் 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிமாசலில் பாதிப்பு
ஹிமாசலப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 253 சாலைகள் சேதமடைந்தன. பாலங்கள், விவசாய நிலங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்நிலையில் அங்கு மழை குறைந்ததை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து தொடங்கியது.
ஜம்முவில் உயிர்பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜெஸ்ரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 2 சகோதரிகள் பலியானார்கள். வீடு இடிந்ததில் ஒருவர் பலியானார்.
அருணாசலத்தில் நிலச்சரிவு
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையினால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது. சாலைப் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இடாநகர், நகர்லாகூன் இடையேயான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கார்சிங்ஸ் பகுதியில் உள்ள சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பாலம் ஒன்று நீரில் மூழ்கியது.
தொற்று நோய் அபாயம்
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. மழை காரணமாக தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உத்தரகாண்ட் உயிர்பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மழை தொடரும்
இந்நிலையில், மேலும் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறித்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கேத்வார் என்ற பகுதியில் ஆற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தவிப்பு
மேலும், உத்தரகாண்ட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. பௌரி கார்வால் என்ற பகுதியிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தலைவர்கள் இரங்கல்
மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.