அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல்
கவுகாத்தி: துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவானான மறைந்த மரடோனாவின் விலை உயர்ந்த லிமிடெட் எடிசன் வாட்ச் இன்று காலை அசாம் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சர்வதேச கால்பந்து உலகில் ஜாம்பவானாகக் கருதப்பட்டவர் மரடோனா. 1986இல் அர்ஜெண்டினா அணிக்குத் தலைமை தாங்கிய மரடோனா, உலகக் கோப்பை அர்ஜெண்டினா வெல்லக் காரணமாக இருந்தார்,
பல விலை உயர்ந்த வாட்ச்களை வைத்துள்ள மரடோனா, Maradona Big Bang Chronograph என்ற லிமிடெட் எடிஷன் வாட்ச்களையும் வைத்துள்ளார். கடந்த 2010 உலகக் கோப்பை சமயத்தில் கூட மரடோனா இந்த வாட்ச்களை அணிந்திருந்தார்.

ஒருவர் கைது
துபாயில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த வாட்ச் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானது. இந்த வாட்ச்சை கண்டுபிடிக்கும் பணிகளில் துபாய் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்தச் சூழலில் சுமார் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இந்த லிமிடட் எடிசன் கடிகாரம், அசாம் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரிந்து, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபரின் வீட்டில் இருந்து இந்த வாட்ச் மீட்கப்பட்டுள்ளது.

அசாம் முதல்வர்
இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தனது ட்விட்டரில். "துபாய் போலீசாருடன் இணைந்து பணியாற்றிய அசாம் போலீசார் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மறைந்த டிகோ மரடோனாவுக்கு சொந்தமான Hublot கடிகாரத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பாக வாஜித் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்,

அசாம் டிஜிபி
இது தொடர்பாக அசாம் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், "இந்த கடிகாரம் அர்ஜெண்டினா கால்பந்து வீரருக்கே சொந்தமானது, இது துபாயில் மற்ற அரிய பொருட்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. துபாய் காவல்துறை மத்திய முகவை மூலம் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ஹுசைன் என்பவர் மரடோனா கையெழுத்திட்ட ஹூப்லாட் கடிகாரத்தைத் திருடிவிட்டு அசாமுக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் சிப்சாகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாஜித் ஹுசைனை கைது செய்தோம். அவரிடமிருந்து கடிகாரமும் மீட்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது
துபாயில் மரடோனாவின் உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தில் வாஜித் ஹுசைன் காவலாளியாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கிருந்து மரடோனாவின் வாட்ச்சை திருடிய வாஜித் ஹுசையன், கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்தியா திரும்பியுள்ளார். இருப்பினும், இந்தியா வந்த பிறகு அவர் மீண்டும் சவுதி திரும்பவில்லை. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

வாட்ச் சிறப்பம்சம்
இந்த வாட்ச்சின் பின்புறம் மரனோடாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கையெழுத்து மற்றும் ஜெர்சி எண் ஆகியவையும் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010 உலகக் கோப்பை சமயத்தில் இந்த வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தமே 250 மட்டுமே உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் 2010 உலகக் கோப்பை சமயத்திலேயே விரைவாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications