காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை- கர்நாடகா வனத்துறையே கடும் எதிர்ப்பு!
பெங்களூரு: கர்நாடக அரசு கட்டப் போவதாக அறிவித்துள்ள "மேககேதாட்டு அணை"க்கு கர்நாடக அரசின் வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் கனகபுரா தாலுகாவில் மேககேதாட்டு என்ற இடம் உள்ளது. இது காவிரியில் அர்காவதி என்ற துணை நதி கலந்து சங்கமமாகும் இடமாகும்.
இங்கு அணை கட்டப் பட்டால் இங்குள்ள காடுகளில் வசிக்கும் 6000 யானைகளின் வழித்தடம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது கர்நாடக வனத்துறை.மேலும் அணை கட்டப்படுவதற்கு அங்குள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் பற்றி கர்நாடக வனத் துறை வன விலங்குகள் பிரிவு தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி வினய் லுத்ரா கூறியுள்ளதாவது: கர்நாடக அரசின் மேககேதாட்டு நீர்ப்பாசன திட்டத்தால் காவிரி வன விலங்குகள் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடு நீரில் மூழ்கி விடும்.
சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இதுபோன்ற திட்டங்களை வனத் துறை எதிர்த்து வருகிறது. காவிரி வன விலங்கு சரணாலயம் நாட்டிலேயே புலிகள் மற்றும் யானைகள் வசிக்கும் மிகப்பெரிய வனப்பகுதியாக உருவாகும் சாத்தியமுள்ளது.
இந்த பகுதியில் வனத் துறை பொருத்தியுள்ள "கேமரா டிராப்" களின் மூலம் மிக அபூர்வமான வன விலங்குகளின் நடமாட்டம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் காவிரி வன விலங்குகள் சரணாலயத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த இடத்தில் நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தினால் வன விலங்குகள் பாதிக்கப்படும். மேககேதாட்டு நீர்ப்பாசன திட்டத்தினால் காவிரி நீர்ப்பாசனப் பகுதியில் நீர்வரத்து அதிகமாகும். இந்த அதிகமான நீரினால் காடுகள் மூழ்குவது மட்டுமின்றி வனப்பகுதியை சீரழித்து விடும். எனவே இந்த திட்டத்தை கை விடுவது நல்லது.'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.