பதவி பறிபோன விரக்தி- அருணாசலபிரதேச மாஜி முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை
இடாநகர்: பதவி பறிபோன துயரத்தில் இருந்த அருணாசலபிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி முதல்வராக இருந்து வந்தார். நபம் துகிக்கு எதிராக கலிக்கோ புல் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஆதரவு தந்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநரின் ஒத்துழைப்புடனும் பாஜக ஆதரவுடனும் கலிக்கோ புல் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், அருணாச்சலப் பிரதேசத்தில் கல்லிக்கோ புல் தலைமையிலான ஆட்சி சட்டவிரோதமானது; அவரது ஆட்சியை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது.
Former Arunachal Pradesh CM Kalikho Pul passes away in Itanagar, Arunachal Pradesh. pic.twitter.com/3rmRuo2KA3
— ANI (@ANI_news) August 9, 2016
47 வயதான கலிக்கோபுல் 6 மாதங்கள் அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தது. சில வாரங்களுக்கு முன்னர் புதிய முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.
தமது ஆட்சியை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்தே பெரும் துயரத்தில் இருந்து வந்தார் கலிக்கோ புல். இந்த நிலையில் இன்று காலை இட்டா நகரில் தம்முடைய வீட்டில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பதவி பறிபோன துயரத்தில் முன்னாள் முதல்வர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்தவர்..
பதவி பறிபோன விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கலிக்கோ புல்லின் இளமைக்காலம் ஏழ்மை துயரம் கொண்டது. தம்முடைய 6 வயதில் தந்தையை இழந்தார். 13 வயதில் தாயையும் பறிகொடுத்தார்.
இரவு நேர பள்ளிகூடத்தில் படித்த கலிக்கோ புல் பகலில் பீடி, பான் போன்றவற்றை விற்பனை செய்து அதன் மூலமான வருவாயை கல்வி செலவுக்கு பயன்படுத்தினார். கார்பென்டராகவும் இரவு வாட்ச்மேனாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் சங்கத்தின் பொதுச்செயலராக இருந்தார். 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தது. கடந்த பிப்ரவரியில் அருணாசலப் பிரதேசத்தின் 8-வது முதல்வரானார். ஆனால் 6 மாதமே அவரது பதவி நிலைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவால் அவர் பதவி விலக நேரிட்டது.