ஜனவரியில் ரிலீசாகிறது ஆ.ராசாவின் அடுத்த அணுகுண்டு... 2ஜி மர்மத்தை உடைக்கப் போகும் புத்தகம்!
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் என்ன நடந்தது என்று ஆ. ராசா சிறையில் இருந்த காலகட்டத்தில் எழுதிய புத்தகம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன, தான் எப்படி இந்த வழக்கில் சிக்கினேன் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை ஆ. ராசா தான் சிறையில் இருந்த காலத்தில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஜனவரி மாத இறுதியில் டெல்லியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பினை கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றமற்றவர்கள் எனக்கூறி தீர்ப்பளித்தார் நீதிபதி ஓ.பி.சைனி. இதனையடுத்து ராஜ்ய சபா எம்பி கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் விடுதலையை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
தீர்ப்பு வெளியாகி சென்னை திரும்பிய கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போன்று கோவை வந்த ஆ.ராசாவிற்கு விமான நிலையமே அமர்க்களப்படும் வகையில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. வழக்கில் இருந்து வெளிவந்தாலும் இது ஒரு புனையப்பட்ட வழக்கு இதன் மர்மம் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கே தெரியாமல் போனது எப்படி என்ற வருத்தத்தில் தான் இருக்கிறார் ஆ. ராசா.

காங். மீது குற்றச்சாட்டு
தான் விடுதலையானது குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் கூட உளவுத்துறையை கையில் வைத்திருந்த மத்திய அரசுக்கே இந்த வழக்கின் விந்தை புரியாமல் போனது மர்மமானது. ஐமுகூ அரசை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டதை அரசே உணர முடியாமல் போனது தான் அந்த ஆட்சியின் அவலம் என்று ராசா குறிப்பிட்டிருந்தார்.

நீதி கிடைக்க வேண்டாமா?
ஒருவனை குறை கூறிவிடுவது எளிது. அந்த நாக்கிற்கு இரண்டு கைதட்டல் கிடைக்கும். ஆனால் குறை கூறியவனின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா? என்றெல்லாம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ராசா.

ராசாவின் அனுபவங்கள்
இந்நிலையில், 2ஜி வழக்கு குறித்து திஹார் சிறையில் 15 மாதங்கள் இருந்தபோது எழுதிய புத்தகத்தை ஆ.ராசா வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் ஜனவரிமாத இறுதியில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

அ முதல் ஃ வரை அத்தனையும்
2ஜி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த வழக்கின் விசாரணை, அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைகள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், 2ஜி வழக்கை வைத்து திமுகவை அவமானப்படுத்திய தேசிய ஊடகங்களுக்கு பாடம் புகட்டும் வகையிலான தகவல்களும் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆ.ராசாவின் இந்த புத்தகம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications