மறைந்தார் பஞ்சாபை அமைதி பூமியாக மாற்றிய "சூப்பர் காப்" கேபிஎஸ் கில்!
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் அட்டகாசத்தை ஒடுக்கியவரான முன்னாள் டிஜிபி கேபிஎஸ் கில் மரணமடைந்தார்.
டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் கில். அங்கு அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கில்லுக்கு வயது 82. சூப்பர் காப் என்று பெயர் பெற்ற கில்லின் முழுப் பெயர் கன்வர் பால் சிங் கில் என்பதாகும். பஞ்சாபில் தனது பதவிக்காலத்திலேயே காலிஸ்தான் இயக்கத்தினரின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.
பஞ்சாப் மாநில டிஜிபியாக இரு முறை பதவி வகித்தவர் கில். காலிஸ்தான் இயக்கத்தினரின் வன்முறையில் சிக்கித் தவித்த பஞ்சாபை அமைதி பூமியாக மாற்றியவர் கில். வெளிப்படையாக பேசக் கூடியவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
1995ம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் மாநில அரசுக்கு தேவையானபோதெல்லாம் அறிவுரைகளை வழங்கி வந்தார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ம் ஆண்டு தனது மாநில பாதுகாப்பு ஆலோசகராக கில்லை நியமித்தார். கோத்ரா வன்முறைக்குப் பின்னர் தனது அரசுக்கு ஏற்பட்ட கேவலமான பெயரைத் துடைக்க கில்லை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டார் மோடி.
இதேபோல சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங்கும் கூட தனது மாநில பாதுகாப்பு குறித்து கில்லிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
சில சர்ச்சைகளில் பின்னர் சிக்கினாலும் கூட அவரது திறமையான போலீஸ் செயல்பாடுகளுக்காக மக்களால் நினைவு கூறப்பட்டவர். கில் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.