இந்திய வரலாற்றில் முதன்முறையாக... குடியரசு தின விழாவில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள்!
டெல்லி: இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்றதையடுத்து இந்த அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் 67வது குயடிரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாலெந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ராணுவ வீரர்களுக்கு விருதுகள்:
இதைத் தொடர்ந்து நாட்டுக்காக போராடி உயர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அசோக் சக்ரா விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் வழங்கினார். மோகன் நாத் கோஸ்வாமிக்காக அவரது மனைவி பாவ்னாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும், கீர்த்தி சக்ரா, சோவ்ரியா சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
ஏவுகணைகள் அணிவகுப்பு:
அதனைத் தொடர்ந்த அணிவகுப்பில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் ஆயுதங்களான பீஷ்மா பீரங்கி, பிரமோஸ் ஏவுகணை, ஆகாஸ் ஏவுகணை வாகனங்கள் அணிவகுந்து வந்தன.
ராணுவ வீரர்கள் அணிவகுப்பு:
இதைத் தொடர்ந்து, பாராசூட் ரெஜிமென்ட் படைப்பிரிவினர், காலாட்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள், கப்பற் படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள், எல்லைப்பாதுகாப்பு படையின் ஒட்டகப்படை வீரர்களின் அணிவகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.
பிரான்ஸ் நாட்டினரும்:
இந்த அணிவகுப்பில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ராணுவத்தினரும் இடம்பெற்றிருந்தனர். மேலும், ராணுவத்தினரால் பயிற்சியளிக்கப்பட்ட 36 ஜெர்மன் ஷெப்பர்டு, லேபரடார் வகை மோப்ப நாய்களும் முதன்முறையாக இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. 26 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின அணிவகுப்பில் நாய்கள் படை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.