ஒரு காலத்தில் ரைஸ் மில் ஊழியர்.. எடியூரப்பா.. ஒரு பிளாஷ் பேக்!
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி ஒரு காலத்தில் ரயிலில் டீ விற்றவர் என்று அவரது கதை கூறுகிறது. அதேபோல கர்நாடகத்தில் மீண்டும் முதல்வர் பொறுப்பில் அமரவுள்ள எடியூரப்பா ஒரு காலத்தில் ரைஸ் மில்லில் வேலை பார்த்தவர் என்பது ஆச்சரியகரமானது.
அவரது அரசியல் பயணம் மிகக் கடுமையானது. கர்நாடகத்தில் பாஜகவின் முகமாக மாறி நிற்பவர். இடையில் பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டு சிறைக்கும் போய் மீண்டும் பாஜகவுக்கே திரும்பியவர் அவர்.
எடியூரப்பாவின் பங்கு இல்லையென்றால் கர்நாடகத்தில் பாஜக இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல, பாஜகவின் வாக்கு வங்கியை பலப்படுத்தியவரும் கூட.
ஆர்எஸ்எஸ் பின்னணி
வழக்கம் போல எடியூரப்பாவின் ஆரம்பமும் ஆர்எஸ்எஸ்தான். அங்கிருந்து தென்னகத்தின் முதல் பாஜக முதல்வரானது வரையிலான அவரது பயணம் மிகக் கரடு முரடானது. ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா நகராட்சித் தலைவராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் எடியூரப்பா.
ரைஸ் மில்லில் வேலை பார்த்தவர்
இவரது இளமைக்காலம் மிக மிக சாதாரணமானது. பாஜகவின் தாயான ஜன சங்கத்தில் சேருவதற்கு முன்பு இவர் ஒரு ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தார். பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். 1972ம் ஆண்டு ஜன சங்கத்தின் ஷிகாரிபுரா தாலுகா தலைவராக நியமிக்கப்பட்டார்.
மிசா சிறை
1975ம் ஆண்டு அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டு ஷிமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளில் 45 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் இவரது அரசியல் பயணம் வேகம் பிடித்தது.
முதல் பதவி
1983ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தார் எடியூரப்பா. எம்எல்ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குள் நுழைந்தார். அதன் பின்னர் ஷிகாரிபுரா சட்டசபைத் தொகுதியிலிருந்து 6 முறை இவர் உறுப்பினரானார். 1988ம் ஆண்டு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 1994ம் ஆண்டு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2004ம் ஆண்டு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.
குமாரசாமியுடன் புதிய கூட்டணி
குமாரசாமியுடன் கை கோர்த்து தரம்சிங் அரசைக் காலி செய்து விட்டு பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைத்தது. இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி ஆளுக்கு 20 மாதம் பதவி வகிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். முதலில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். ஆனால் எடியூரப்பாவின் வாய்ப்பு வந்தபோது பதவி விலக குமாரசாமி மறுத்தார். இதனால் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முதல் முறையாக முதல்வர் பதவி
அதன் பின்னர் இரு கட்சிகளும் சமரசம் பேசி உடன்பாட்டுக்கு வந்தன.. இதையடுத்து 2007ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் எடியூரப்பாவின் முதல்வர் பதவி முடிவுக்கு வந்தது.
2வது முறையாக முதல்வர் பதவி
2008ல் நடந்த சட்டசபைத் தேரத்லில் பாஜக முதல் முறையாக தனித்து வென்றது. எடியூரப்பா 2வது முறையாக முதல்வரானார். இதன் மூலம் தென்னகத்தில் முதல் முறையாக முதல்வரான பாஜக தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால் அவரது பதவியை பாஜக மேலிடம் 2011ல் பறித்தது. காரணம் சுரங்க ஊழல் மற்றும் மேலும் பல ஊழல் புகார்கள். சிறைக்கும் போனார். 20 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் எடியூரப்பா, கர்நாடக ஜனதாக் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.
மீண்டும் பாஜக
ஆனால் 2014ம் ஆண்டு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பினார். இதனால் கர்நாடக பாஜகவுக்கு மீண்டும் பலம் கிடைத்தது. எடியூரப்பா மூலம் கிடைத்த பலத்தால் இன்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக.
மனைவி இல்லை
எடியூரப்பாவின் மனைவி மைத்ராதேுவி 2004ம் ஆண்டு இறந்து விட்டார். அவர் மர்மமான முறையில் ஷிமோகாவில் உள்ள வீட்டுக் கிணற்றடியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். எடியூரப்பாவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.