பூங்கா நகரம் பெங்களூர், இப்படி குப்பை ஊராகிவிட்டதே..
பெங்களூர்: குப்பையை கொட்ட வழியின்றி, அவை தேங்கிப்போய் கிடப்பதால், பூங்கா நகர் என்று அழைக்கப்படும் பெங்களூர் இப்போது குப்பை நகரமாக காட்சியளிக்கிறது.
பெங்களூர் நகரில் மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள், புறநகர் பகுதியான மகாதேவபுரா, அருகிலுள்ள மண்டூர் என்ற கிராமத்தில் கொண்டு கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பு, நிலத்தடி நீர் மாசு போன்ற பல பிரச்சினைகளை மண்டூர் மக்கள் சந்தித்தனர். குப்பை தேங்குவதால் தங்களுக்கு பல நோய்கள் பரவுவதாக குற்றம் சாட்டி, 2012ம் ஆண்டு, மண்டூர் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இதனால் பெங்களூர் நகரில் குப்பை தேங்கியது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமாதானப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு மண்டூரில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டது.
இருப்பினும், விரைவில் வேறு பகுதிக்கு குப்பையை கொண்டு சென்று கொட்டுவோம் என்று மண்டூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பெங்களூர் மாநகராட்சி காப்பாற்றவில்லை. பொறுத்துப்பார்த்த மண்டூர்வாசிகள் கடந்த சில தினங்களாக மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்துவிட்டனர். குப்பையை கொட்டுவதற்கு மாநகராட்சி லாரிகளை அனுமதிக்காமல் மறியல் செய்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இரவு நேரத்தில் லாரிகளில் வந்து குப்பை கொட்டப்படுவதால் இரவும் ஆண்களும், பெண்களும் கண்விழித்திருந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் பெங்களூரில் இருந்து சித்தூர் வழியாக சென்னை செல்லும் ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் குப்பை லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் ஐநூறு லாரிகள் இதுபோல நிற்பதால் ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசிக்கும் பெங்களூர்வாசிகள் மூக்கை பிடித்தபடி நடமாடுகிறார்கள்.
பெங்களூரில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இப்போது குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால், தெருக்களின் மூலைகளில் மக்கள் குப்பைகளை கொட்டி அலங்கோலம் செய்து வருகிறார்கள். பூங்காக்கள் அதிகம் இருப்பதால் பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர், இப்போது குப்பை நகரமாக மாறத்தொடங்கியுள்ளது. இதனிடையே போராட்டம் நடத்திய கிராமக்கள் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாமல் அடுத்தடுத்த அரசுகள் ஓராண்டு காலமாக தவித்து வருகின்றன. சேலத்தில் நவீன முறையில் குப்பை அகற்றும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவதால், பெங்களூர் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் சேலத்துக்கு சென்று ஆய்வு நடத்தி திரும்பினர். ஆயினும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.