வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! வேட்பாளர் அதிர்ச்சி
பெங்களூர்: வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தவிர்த்துவிட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேறு சின்னத்தை ஒட்டி வைத்ததால், பெண் வேட்பாளர், கிராம பஞ்சாயத்து தலைவராகும் வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
பெங்களூர் அடுத்த கெங்கேரி அருகேயுள்ளது ராமோஹள்ளி கிராம பஞ்சாயத்து. இப்பஞ்சாயத்துக்கு ஜூன் 2ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சல்லகட்டா வார்டில் நாகரத்னா என்ற பெண்மணி போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் சின்னமாக, காஸ் ஸ்டவ் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் நடைபெற்றபோது, வாக்களிக்கப் போனவர்களுக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், வாக்குப்பதிவு இயந்திரத்தில், காஸ் ஸ்டவ் சின்னமே இடம்பெறவில்லை. நாகரத்னா மற்றும் அவருக்கு வாக்களிக்க விரும்பியவர்கள் குழப்பமடைந்தனர்.
அதேநேரம், நாகரத்னா பெயருக்கு நேரே, காஸ் சிலிண்டர் படம் ஒட்டப்பட்டிருந்தது. எனவே தேர்தல் ஆணையம்தான் தவறுதலாக ஸ்டவ்வுக்கு பதிலாக, சிலிண்டர் படத்தை ஒட்டியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நாகரத்னா அளித்த புகாரை தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதனிடையே மற்ற பகுதிகளில் பதிவான வாக்குகள் அடிப்படையில், கிராம பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு, தலைவர், துணைத் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை எதி்ர்த்து நாகரத்னா சார்பில் கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, பெண்ணுக்காக ரிசர்வ் செய்யப்பட்டது என்பதால், நான் வென்றிருந்தால், தலைவராகியிருப்பேன். இப்போது தேர்தல் ஆணைய குளறுபடியால் அது நடக்கவில்லை., எனவே தேர்தல் செல்லாது என்று அறிவித்து பஞ்சாயத்தை கலைக்க வேண்டும் என்று கோரினார்.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தனது தவறை திருத்தி 25 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், மற்ற வார்டுகளில் தேர்வானவர்கள் பதவியை இழக்க தேவையில்லை. பஞ்சாயத்து ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டதால், அதை கலைக்க தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.