யாரு அப்பன் வீட்டு சொத்து?, கெட் அவுட்: ஐஏஎஸ் அதிகாரியிடம் கத்திய கெஜ்ரிவால்
டெல்லி: தன்னை பார்த்து கெட் அவுட் என கோபமாக கத்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி கே. ஆர். மீனா தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரியான கே.ஆர். மீனா. அவர் கடந்த 10ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கெஜ்ரிவால் மற்றும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவருக்கு அளிக்குமாறு நிர்பந்திக்க மீனா மறுத்தாராம். இதனால் கோபம் அடைந்த கெஜ்ரிவால் கெட் அவுட்(வெளியே போங்க) என்று கத்தினாராம்.
இது குறித்து மீனா கூறுகையில்,
தனது வீட்டிற்கு என்னை அழைத்த கெஜ்ரிவால் கழகத்தின் நிலத்தை தனி நபருக்கு ஒதுக்க முடியாது என்று நான் கூறியவுடன் வெளியே போகுமாறு கத்தினார். அதுவும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முன்னிலையில் கத்தினார்.
கழகத்தின் நிலம் யாருடைய அப்பன் சொத்தும் இல்லை. அதை நல்ல காரியத்திற்காக நாங்கள் பயன்படுத்துவோம் என்றார். என்னை வீட்டிற்கு வரவழைத்து அவமானப்படுத்தியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.