கோபால் சுப்பிரமணியத்துக்கு நீதிபதி பதவி கிடைக்காததற்கு நீரா ராடியா காரணமா?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொண்டதாலும், நீரா ராடியாவுடனான உரையாடலுமே உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க மத்திய அரசு தயங்குவதற்கு காரணங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டியவர்களின் பெயர்களை, இதற்காக அமைக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலிஜியம்) மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல்களான ஃபாலிநாரிமன், கோபால் சுப்பிரமணியம், ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளான ஆதர்ஷ்குமார் கோயல் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் கோபால் சுப்பிரமணியம் பெயரை மட்டும் மத்திய அரசு ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் குறித்த நல்ல அபிப்ராயம் மக்கள் மத்தியில் நிலவும் சூழ்நிலையில், சர்ச்சைகளில் சிக்கியுள்ள கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக்க மத்திய அரசு விரும்பவில்லை என்று சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
2010ல் சொலிசிட்டர் ஜெனராலாக பதவிவகித்த கோபால் சுப்பிரமணியம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொலைதொடர்பு துறைக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது சிபிஐ அதிகாரிகளை தொடர்புகொண்டு வழக்கு குறித்த விவரங்களை தன்னிடம் தெரிவிக்குமாறு கோபால் சுப்பிரமணியம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ராஜாவுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும்படி கோபால் சுப்பிரமணியம் வற்புறுத்தியதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். இருப்பினும் சிபிஐ இதற்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தால் தனது வற்புறுத்தலை கோபால் சுப்பிரமணியம் நிறுத்திக்கொள்ள நேர்ந்தது என்றும் சிபிஐ வட்டாரங்கள் அரசிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும், மத்திய உளவுத்துறையும், கோபால் சுப்பிரமணியத்துக்கு எதிராக மிகப்பெரிய விமர்சன பட்டியலையே அளித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புள்ள, நீரா ராடியா மற்றும் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த டேப் ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்ததும், ஒரு முக்கியமான காரணமாக உளவுப்பிரிவால் முன்வைக்கப்பட்டுள்ளதாம். இவையெல்லாம்தான் கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மத்திய அரசு எதிர்க்க காரணங்களாக கூறப்படுகிறது.