ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான 32 இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி!
டெல்லி: இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான வாசககங்களை வெளியிட்டதாக 32 இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இணையதளங்களுக்கு தணிக்கை உண்டு. சீனாவில் இணையதளங்களை தணிக்கை செய்யும் அமைப்பு பேஸ்புக், கூகுள் போன்ற இணையதளங்களை கூட சில நேரங்களில் தடை செய்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் இணையதள தணிக்கை முறை இதுவரை இல்லை.
அண்மையில் பெங்களூரில் மேதி பிஸ்வாஸ் என்பவர் ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆட்சேர்த்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து இணையதளங்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது முடக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பெரும்பாலானவை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்டவை என்கிறது மத்திய அரசு தகவல்கள்.
சர்ச்சைக்குரிய இந்த இணையதளங்களின் செயல்பாடு குறித்து ஆராய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படையினர் அதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட இணையதளங்கள்:
justpaste.it
hastebin.com
codepad.org
freehosting.com
vimeo.com
dailymotion.com
pastebin.com
gist.github.com
archive.org
ipaste.eu
github.com
pastie.org
pastee.org
paste2.org
thesnippetapp.com
snipt.net
tny.cz (Tinypaste)
slexy.org
paste4btc.com
0bin.net
heypasteit.com
sourceforge.net/projects/phorkie
atnsoft.com/textpaster
hpage.com
ipage.com
webs.com
weebly.com
000webhost.com
snipplr.com
termbin.com
snippetsource.net
cryptbin.com
அதெப்படி முடக்கலாம்?
இதனிடையே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இணையதளங்களைக் கூட இந்தப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்து முடக்கியிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, சர்ச்சைக்குரிய அந்த தகவல்களை இணையதளங்கள் நீக்கிவிட்டால் அவற்றை முடக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த இணையதளங்களை முடக்குவதற்கு முன்பு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருசில இணையதளங்கள் மட்டுமே பதிலளித்திருந்தன. இதனையடுத்தே இந்த 32 இணையதளங்களும் முடக்கப்பட்டன என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.