இதையாவது விட்டு வச்சாங்களே.. தனிநபர் வைத்திருக்கும் தங்கத்துக்கு கட்டுப்பாடு இல்லையாம்
கருப்பு பணத்தை ஒழிக்கும் அடுத்த நடவடிக்கையாக தனிநபர்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லையாம்
டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்க தனிநபர் வைத்திருக்கும் தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, கருப்பு பணத்தை அதிக அளவில் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கருப்பு பணத்தை ஒழிக்கும் அடுத்த நடவடிக்கையாக தனிநபர்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்படி ஒரு திட்டம் ஏதும் இல்லை என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகளில் தனிநபர் டிஜிட்டல் லாக்கரை வருவாய்த்துறை அதிகாரி முன்னிலையில் தான் திறக்க முடியும் என்று புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது 2ஆவது இடத்தில் உள்ளது. நம்நாட்டில் ஆண்டுதோறும் 1000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இது உலகின் ஒட்டுமொத்த தங்க இறக்குமதியில் மூன்றில் ஒருபகுதியாகும்.
தங்கம் விற்பனை
ரூபாய் நோட்டு தடை தொடர்பான அறிவிப்பு வெளியான நவம்பர் 8ம் தேதியன்று நகைக்கடைகளில் குவிந்த கூட்டமும், நாட்டின் தங்க இறக்குமதி இந்த வாரத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு இல்லாத உச்சத்தைத் தொட்டது. எனவே, மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை உள்நாட்டு தங்க இருப்பைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்று நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்பது தெரியவில்லை.
வீடுகளில் தங்கம்
அதேவேளையில், தனிநபர்கள் வீடுகளில் வைத்திருக்கும் தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது நாட்டில் இப்போது நகைகளாக மட்டும் 20 ஆயிரம் டன் தங்கம், வங்கி லாக்கர்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது.
தங்க டெபாசிட்
இந்த தங்கத்தை உள்நாட்டிலேயே மறுசுழற்சிக்கு விடும் வகையில் வட்டியுடன் கூடிய தங்க டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது.
இது தவிர, தங்கத்தை பத்திர வடிவில் அளிக்கும் தங்கப் பத்திரத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவில் இத்திட்டங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. தங்கத்தை நகைகளாகவும், கட்டிகளாகவும் வாங்கிக் குவிக்கும் ஆர்வம்தான் தொடர்ந்து வருகிறது.
தங்கத்தின் மீது நடவடிக்கை
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து கருப்புப் பணத்தை ஒழிக்கத் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசு அடுத்ததாக, தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், தங்க இறக்குமதியால் பெருமளவில் அன்னியச் செலாவணி வீணாகிறது. மேலும், தற்போது ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து கருப்புப் பணம் பெருமளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.