மாத சம்பளக்காரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிலையான கழிவு திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு திட்டம்!
Recommended Video
டெல்லி: வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், மாத சம்பளம் வாங்குவோருக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பழைய நடைமுறையான நிலையான கழிவு (Standard deduction) திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கொண்டுவருவார் என கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது நாள் வரை பொருளாதார சீர் திருத்தம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதக்கியதற்கு பரிகாரமாக மத்திய அரசு சில கவர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்ச்சி, இலவச திட்டங்கள் அறிவிக்கப்படாது என பிரதமர் மோடி கூறியிருந்தாலும், சர்ப்ரைசாக அதை அறிவித்து தங்கள் வாக்கு வங்கியான நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களை குஷிப்படுத்தவே பாஜக நினைக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
மாதச்சம்பளக்காரர்கள்
இந்தியாவில் 70 சதவீத வருமான வரி மாத சம்பளம் பெறுவோரிடமிருந்தே வருகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் வரியில் இருந்து தப்பி வந்தாலும், ஜிஎஸ்டி மூலம், அவர்கள் பரிவர்த்தனை கண்காணிக்கப்படுவதால் இனி எளிதில், தப்ப முடியாது. ஆனால், அவர்களுக்கு வரி விலக்கு தொடர்பாக நிறைய சலுகைகள் உள்ளன. ஆனால், மாத ஊதியம் பெறுவோர் முதலீடு சார்ந்த திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை மட்டுமே வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ செலவுகளுக்கு ரூ.15,000 மட்டுமே விலக்கு உள்ளது.
பணப்புழக்கம் தேவை
மாத சம்பளம் பெறுவோர் நியாயமாக வரி கட்டினாலும் அவர்களது கைகளில் பணம் புழங்குவதில்லை. அவர்களின் பண புழக்கத்தை அதிகரிக்க வருமான வரியின் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும் என்பது கோரிக்கை. எனவே ரூ.30000 வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு வழங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள அளவில் இருந்து இது 50,000 மட்டுமே அதிகம். விலைவாசி உயர்வை ஒப்பிட்டால் இதனால் பலன் கிடைக்காது.
பழைய நடைமுறை
எனவே, மாத சம்பளக்காரர்களுக்கு பழையபடி நிலையான கழிவு திட்டத்தை செயல்படுத்த நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. 2006 வரை இந்த நடைமுறை இருந்தது. அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதை நீக்கிவிட்டார். இந்த நடைமுறைப்படி ஆண்டுக்கு ரூ.5,00000 க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.20,000 நிலையான கழிவு என வழங்கப்பட்டது. இதற்கு கணக்கு காட்ட தேவையில்லை. மற்ற தொகைக்குதான் வரி கணக்கிடப்படும்.
சலுகை திட்டம்
எனவே மீண்டும் அதேபோன்ற நடைமுறையை கொண்டுவரலாம். குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை நிலையான கழிவு என கூறி சலுகை தரலாம் என்பது மத்திய அரசின் திட்டமாக உள்ளது. இதன்மூலம், மாதச்சம்பளதாரர்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது பொருளாதார வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தற்போதும் மாத சம்பளதாரர்கள் சுமார் 40000 முதல் 73000 ரூபாய் வரையில் நிலையான கழிவு தொகையை வருமான வரியில் சலுகையாக பயன்பெற்று வருகிறார்கள்.