சபாஷ்.. தானாக முன்வந்து கருப்பு பண தகவலை அளித்த இந்தியர்கள்! ரூ.3770 கோடி வசூலாக வாய்ப்பு
டெல்லி: வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் ரூ.3770 கோடி மதிப்புள்ள கருப்பு பண விவரத்தை மக்கள் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்காக, ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையில், இ-பைலிங்கிற்கான விண்டோ திறக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று கடைசி நாள் என்பதால், காலையில் இருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களை நேற்று தானக முன்வந்து பலர் அளித்தனர். நேற்று நள்ளிரவு வரை இந்த பணி நீடித்தது.
இந்த நிலையில், கருப்பு பணம் பற்றிய 638 பிரமாணப்பத்திரங்கள் வந்திருப்பதாகவும், இதன்படி ரூ.3770 கோடி ரூபாய் கருப்பு பணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.