தனியார் நிறுவன பெண்களின் பிரசவ விடுப்பை 6.5 மாதமாக உயர்த்தும் மோடி அரசு
டெல்லி: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பிரசவ விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகப்பேறு நல சட்டத்தின்படி தற்போது பெண்களுக்கு 12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு மகப்பேறு நல சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,
மகப்பேறு நல சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு அதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டி உள்ளதால் பிரசவ விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்றார்.
விடுப்பு பற்றி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பெண்களுக்கு 6.5 மாதங்கள் பேறுகால விடுப்பு அளிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டது. ஆனால் பெண்களுக்கு 8 மாதங்கள் பிரசவ விடுப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது குறித்து மத்திய அமைச்சரவைக்கு மனு அனுப்பி வைப்போம். குழந்தைகள் நோய், நொடியின்றி இருக்க அவர்களுக்கு 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றார்.
42 நாடுகளில் 18 வாரங்களுக்கு மேல் பிரசவ விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா அந்த பட்டியலில் சேர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.