"அக்னி" நாயகன் அவினாஷ் சந்தர் டிஆர்டிஓ பதவியிலிருந்து திடீர் நீக்கம்..!
டெல்லி: அக்னி ஏவுகணையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவரான அவினாஷ் சந்தர், மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் அவரை பதவியிலிருந்து தூக்கியுள்ளது மோடி அரசு. தான் ஏன் நீக்கப்பட்டோம் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எனவே அதுகுறித்து நான் பேச மாட்டேன் என்று சந்தர் கூறியுள்ளார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக் கமிட்டி, சந்தர் நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 31ம் தேதியுடன் அவரது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளவும் கமிட்டி முடிவு செய்துள்ளது.
சந்தர், இதற்கு முன்பு டிஆர்டிஓவின் செயலாளராக, இயக்குநர் ஜெனரலாக, பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி அவர் ஓய்வு பெற்றிருந்தார். 64 வயதை எட்டியதால் அவர் ஓய்வு பெற்றார். இருப்பினும் அவருக்கு அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அப்போது பதவி நீட்டிப்பு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது அவரை திடீரென நீக்கி விட்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் டிஆர்டிஓவின் செயல்பாடுகள் பிரதமர் மோடிக்கு திருப்தியை அளிக்கவில்லை என்றும் கடந்த ஆண்டு இறுதியில் அவர் டிஆர்டிஓவுக்கு சென்றிருந்தபோது
அவர் அதிருப்தி அடைந்தார் என்றும் இதனால்தான் டிஆர்டிஓ தலைமைப் பொறுப்பிலிருந்து சந்தர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
1972ம் ஆண்டு டெல்லி ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் டிஆர்டிஓவில் சேர்ந்தார் சந்தர். அக்னி வரிசை ஏவுகணைத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் சந்தர். அப்போது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் தனது முழுத் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி அக்னி திட்டம் வெற்றி பெற உறுதுணையா்க இருந்தவர் சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் அதை செயல்படுத்துவது ஆகியவற்றில் இவர் மிகச் சிறந்து விளங்கினார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகிறார்கள்.
தனது நீக்கம் குறித்து சந்தர் கருத்து தெரிவிக்கையில், எனது பதவி விலக்கத்துக்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இதுவரை நீக்கம் குறித்த கடிதம் வரவில்லை காரணம் தெரியாமல் நான் விளக்க முடியாது. இது அரசின் உரிமை. அதை அவர்கள் செய்துள்ளனர். அக்னி ஏவுகணைத் திட்டம் எனது வாழக்கையில் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன் என்றார் சந்தர்.