குறைந்த விலையில் மேலும் 439 உயிர்காக்கும் மருந்துகள்- மத்திய அரசு முடிவு
டெல்லி: உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 439 மருந்துகளை மலிவு விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் முக்கிய மருந்துகளை தரமாகவும், குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான திட்டமான "ஜன் அவ்ஷதி" மத்திய அரசால் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
முக்கிய மருந்துகளை பொது மற்றும் தனியார் மருந்து நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, மத்திய அரசு நாடு முழுவதும் 121 சிறப்பு மருந்தகங்கள் மூலம் உயிர் காக்கும் 40க்கும் மேற்பட்ட மருந்துகளை மலிவு விலைக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தினை மேலும் விரிவாக்கும் வகையில் உயிர் காக்கும் மருந்துகளில் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை 50 சதவிகித தள்ளுபடி விலையில் மலிவு விலைக்கு மக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இம்மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் மிக எளிதாக கிடைக்க ஏதுவாக நாடு முழுவதும் மேலும் 300 மலிவு விலை மருந்துக் கடைகளை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications