கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்காது... அருண் ஜேட்லி எச்சரிக்கை
டெல்லி : கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்காது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இந்திய உச்சி மாநாடு 2015' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அருண் ஜேட்லி பேசியதாவது...
நிதி ஆதாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எந்த ஒரு வளர்ந்து வரும் நாட்டின் குறிக்கோளாக இருக்க முடியும். அந்த வகையில் கருப்புப் பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.
குறிப்பாக, கருப்புப் பண விவகாரம் என்பது சில தனி நபர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாக உள்ளது. இது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய விவகாரம் அல்ல. கருப்புப் பணத்தை சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடன்பட மறுத்தால் அரசு அதை ஏற்காது. மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பண விவகாரத்தில் கடுமை காட்ட வேண்டாம் என்று சிலர் அரசுக்கு யோசனை தெரிவிக்கின்றனர். இதையும் ஏற்க முடியாது. அனைத்து நிதி ஆதாரங்களையும் வங்கி அமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
இதற்காகவே வங்கி அமைப்பு விரிவாக்கம், பணப்பட்டுவாடா வங்களுக்கு அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக, கருப்புப் பணம் (கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து) மற்றும் வரி விதிப்பு சட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு 120 சதவீத வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்படுவதுடன் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அதேநேரம், அரசுக்கு தெரிவிக்காமல் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளைப் பற்றி தெரிவிக்க 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் தெரிவித்துவிட்டால் 60 சதவீத வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும். தண்டனை எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.