சட்டம் அமலுக்கு வந்த பிறகு.. ஜிஎஸ்டி கவுன்சில் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கியது
டெல்லி: நாடு முழுக்க ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கிறார்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கான வரியில் மாற்றங்கள் செய்யவும், வரியைக் குறைக்கவும் அழுத்தம் கொடுத்து அவர் பேச வேண்டும் என தொழில் கூட்டமைப்பினர் அவரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.
பல அரசியல் கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை அறிக்கைகள் வாயிலாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தின் முடிவில் வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்டவற்றின் மீதான வரி விதிப்பு அளவை குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.