குஜராத்: மோடி ரொம்ப பிஸி- நேற்று வேலைவாய்ப்பு முகாம்.. இன்று ராணுவ விமான தொழிற்சாலைக்கு அடிக்கல்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விமானப் படைக்கான சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் ரூ22,000 கோடி மதிப்பீட்டிலான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து குஜராத் பயணங்கள், குஜராத் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதால்தான் அம்மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
குஜராத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாமில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, குஜராத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளும், சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம். குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விரைவான பணி நியமன மாதிரி தேசிய அளவில் பாராட்டப்படுகிறது என்றார்.
மேலும் இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும். குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இன்று டாடா- ஏர்பஸ் நிறுவனத்தின் சி-295 ரக ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். குஜராத் மாநிலம் வதேதராவில் ரூ22,000 கோடி மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.
சி-295 ரக ராணுவ விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏர்பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மொத்தம் 56 போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலையில் 16 விமானங்கள் தயாரிக்கப்படும்; எஞ்சிய 40 விமானங்கள் இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம்- டாடா நிறுவனம் இணைந்து தயாரிக்கும். இந்த தொழிற்சாலைக்குதான் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் இசைக் குழு நாளை பிரதமர் மோடி முன்னிலையில் கெவாடியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.