குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளிலும் வாக்கு பதிவு.. விறுவிறு ஓட்டுப்பதிவு ஆரம்பம்
குஜராத்தில் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடக்க உள்ளது
காந்திநகர்: குஜராத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 89 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது.
நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல்.. கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே இங்கு களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று டிசம்பர் 1-ந் தேதி மற்றும் 5-ந் தேதி என்று 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது... முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்க உள்ளது.. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
மொத்த வேட்பாளர்கள் 1,621.. கல்லூரி செல்லாமல் 1,124 பேராம்.. குஜராத் தேர்தலுக்கு நடுவே மேட்டர் லீக்
கர்ஜனை
வழக்கமாக குஜராத்தில் தேர்தல் என்றாலே, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் போட்டி இருக்கும்.. ஆனால், இந்த முறை, ஆம் ஆத்மியும் களமிறங்கிவிட்டது.. குஜராத் என்றில்லை, கடந்த 2 வருட காலமாகவே ஆம் ஆத்மி, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடியை காட்டிக் கொண்டிருக்கிறது.. காங்கிரசுக்கு செக் வைக்கிறதோ இல்லையோ, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு கிலியை தந்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், குஜராத்தில் 181 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.. ஆட்சியை பிடிப்போம் என்றும் ஆம் ஆத்மி கர்ஜித்து கொண்டிருப்பதால், மும்முனைப்போட்டி குஜராத்தில் எழுந்துள்ளது..
பிரச்சாரம்
எனவே, இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்றது... அதிலும் ஆரம்ப கட்ட பிரச்சார முதல் இறுதிநாள் பிரச்சாரம் வரை, பாஜக மேலிட தலைவர்கள், வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர்.. பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.. அதேபோல, காங்கிரஸ் தலைவர் கார்கே, மற்றும் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள், குஜராத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் மும்முரமாகினர்.. இன்று நடக்கும் முதல்கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன...
பெண் வேட்பாளர்கள்
புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதீய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பாஜக 9 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 6 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளன.
ஸ்டார் வேட்பாளர்கள்
இன்றைய முதல் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கட்வி, கம்பாலியா தொகுதியிலும், முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பர்சோத்தம் சோலங்கி பாவ்நகர் புறநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்... மோர்பி பால விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருதியா, மோர்பி தொகுதியிலும், பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இட்டாலியா, கதர்காம் தொகுதியிலும் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் ஆவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்கள் அடங்கும். இந்த 19 மாவட்டங்களில் உள்ள 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கும் நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 பேர் ஓட்டளிக்க உள்ளதால், தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது..
வாக்குச்சாவடி
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
துணை ராணுவம்
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.. இந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து, வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.