அய்யோ பாஜக வேண்டாம்.. குஜராத்தில் கிளம்பிய வைர தொழிலாளர்கள்.. 30 லட்சம் ஓட்டு போச்சே? தாமரை ஷாக்
காந்தி நகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வைர தொழிலாளர்கள் பாஜகவுக்கு எதிராக கிளம்பி உள்ளனர். சங்கத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் தாமரை சின்னத்துக்கு ஓட்டு போடாதீர்கள் என வைர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மும்முனை போட்டி
இங்கு பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாஜக மக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பெரிய தலைவர்கள் மேடை பிரசாரங்களை செய்யும் நிலையில் வேட்பாளர்கள் உள்பட மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் தெருதெருவாகவும், வீடு வீடாகவும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் குஜராத் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதேபோல் காங்கிரஸ், ஆம்ஆத்மி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வைர தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு
இந்நிலையில் தான் குஜராத்தில் டிடபிள்யூயூஜி எனும் வைர தொழிலாளர் சங்கத்தினர் பாஜகவுக்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்நிலையில் தான் வைர தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். தொழில்முறை வரியை குறைக்க வேண்டும் என நீண்டகாலமாக வைர தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை கடந்த 12 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
30 லட்சம் பேர்
இதனால் தான் தற்போதைய சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என வைர தொழிலாளர் சங்கத்தின் தங்களின் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத், நவ்சாரி மாவட்டம் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இது பாஜகவுக்கு எதிராக அமையலாம் என கூறப்படுகிறது.
கடிதம் எழுதிய சங்கம்
இதுபற்றி வைர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் ஜிலாரியா கூறுகையில், ‛‛வைர தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க பாஜக அரசாங்கத்திடம் தொடர்ந்து கேட்டு வந்தோம். அவர்கள் செவி சாய்க்கவில்லை. இதனால் பாஜகவுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என முதற்கட்டமாக தொழிற்சங்கம் சார்பில் குஜராத் முழுவதும் உள்ள உறுப்பினர்களில் சுமார் 25,000 பேருக்கு கடிதம் மூலமாகவும், 40 ஆயிரம் பேருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி உள்ளோம்'' என்றார்.
எந்தெந்த தொகுதிகளில் பாதிப்பு
குறிப்பாக சூரத்தில் உள்ள கதிர்காம், கரஞ்ச், வராச்சா, காம்ரேஜ் சட்டசபை தொகுதிகள் உள்பட மேலும் சில தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அமையலாம். குறிப்பாக கதிர்காம் மற்றும் வராச்சா தொகுதிகளில் மட்டும் வைரம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் கையில் பெரிய, சிறிய மற்றும் நடுத்தர வகையை சேர்ந்த 4,500 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆம்ஆத்மிக்கு சாதகம்?
தற்போதைய சூழலில் சூரத்தில் உள்ள கதிர்காம், வராச்சா 2 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி சார்பில் குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா மற்றும் முன்னாள் படிதார் இடஒதுக்கீடு போராட்ட தலைவர் அல்பேஷ் கதிரியா போட்டிடுகின்றனர். இங்கு படிதார் மற்றும் வைர தொழில் செய்யும் மக்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளன. பாஜக மீதான வெறுப்பால் இது ஆம்ஆத்மி கட்சிக்கு சாதமாக உள்ளது. கடந்த 2021ல் சூரத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றது தான் இதற்கு சான்றாக உள்ளது. இதனால் குஜராத் தேர்தலில் வைர தொழிலாளர்கள் பிரச்சனை என்பது பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜக கூறுவது என்ன?
இதுபற்றி சூரத் டயமண்ட் அசோசியேஷன் செயலாளர் டாம்ஜி மவானி கூறுகையில், ‛‛வைர தொழிலாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வது உண்மை தான். இருப்பினும் டிடபிள்யூயூஜின் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு தேர்லில் எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்றார். இதுபற்றி பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛வைர தொழில் செய்யும் நபர்களுக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இதனை செய்யவில்லை. வாரச்சாவில் குமார் கனனியும், கதிர்காமுவில் மொராடியாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் சங்க நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறுகின்றன. இருப்பினும் பாஜக வெற்றி பெறும்'' என்றார்.