பாஜகவை ஏமாற்றிய சவுராஷ்டிரா மக்கள்.. குஜராத்தில் களமிறங்கிய பிரதமர் மோடி..மெகா பிளானால் காங்., ஷாக்
காந்தி நகர்: குஜராத்தில் கடந்த முறை பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்திய சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக களமிறங்கி உள்ளார். இன்று, நாளை என 2 நாளில் 7 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் ஷாக்காகி உள்ளனர்.
182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 1, டிசம்பர் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்ள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தை பொறுத்தமட்டில் மும்னை போட்டி நிலவி வருகிறது.

பாஜக தீவிரம்
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இருவரும் குஜராத் தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

3 நாள் பயணம்
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி பல கட்டங்களாக குஜராத்துக்கு விசிட் செய்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இந்த தேர்தலில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 25 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி பிரதமர் மோடி வால்சாத் மாவட்டம் கப்தாராத பொதுக்கூட்டத்தில் பேசினார். இதையடுத்து 2 முறை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக சென்றார்.

7 பொதுக்கூட்டங்களில் பேச்சு
குஜராத்தை பொறுத்தமட்டில் சவுராஷ்டிரா மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 40க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இவர்கள் உள்ள நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சவுராஷ்டிரா மக்களை குறிவைத்து 3 நாட்கள் பிரசாரத்தை துவங்கி உள்ளார். 2வது நாளான இன்று சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார். அதன்பிறகு சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் வெராவல், தோரார்ஜி, அம்ரேலி மற்றும் பொடாட் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். அதன்பிறகு 3வது நாளான நாளை பிரதமர் மோடி சுரேந்திரா நகர், பரூச், நவ்சாரி பகுதி பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். பிரதமர் மோடி இதில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் நடந்தது என்ன?
கடந்த 2017 ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது படிதார் இயக்கத்தினரின் ஆதரவால் சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் 2012 தேர்தலில் இங்கு பாஜக 30 இடங்களில் வென்ற நிலையில் கடந்த தேர்தலில் தாமரை கட்சிக்கு வெறும் 19 இடங்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் சவுராஷ்டிரா மக்களின் ஆதரவை பெறும் முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

அமித்ஷா பிரசாரம்
இது ஒருபுறம் இருக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலத்தில் தபி மற்றும் நர்மதா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். தபியின் நிஜார் கிராமம், நர்மதாவின் தெடியாபாடா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அமித்ஷா பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications