குஜராத் தேர்தலில் பாஜக போடும் புது கணக்கு..20 ஆண்டுகளில் முதல் தடவை..கிறிஸ்தவ வேட்பாளர் களம் இறக்கம்
அகமதாபாத்: குஜராத்தில் தொடர்ந்து 4 முறையாக காங்கிரஸ் வசம் உள்ள தொகுதியில் புது பிளானில் பாஜக கிறிஸ்தவ வேட்பாளரை களமிறக்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் பாஜக கட்சி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவரை களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி விட்டது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே எஞ்சியிருக்கிறது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு
ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்கள் பட்டியலை அனைத்து தொகுதிகளுக்கும் கட்சிகள் அறிவித்து விட்டன. வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றுவிட்டது. இதனால், பிரசாரத்தில் வேட்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத நடைமுறையாக நடப்பு தேர்தலில் முதல் முறையாக ஒரு கிறிஸ்தவ வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக
இந்துத்வா கட்சியாக அறியப்படும் பாஜக சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களை பிற மாநில தேர்தல்களில், நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட வைத்து வெற்றியும் பெற்றிருக்கிறது. இருந்தாலும் குஜராத்தை பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக பாஜக கிறிஸ்தவ வேட்பாளர் யாரையும் நிறுத்தியது இல்லை. ஆனால், இந்த தேர்தலில் வியாரா சட்டமன்ற தொகுதியில் பாஜக மோகன் கோன்கனி என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

43 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களே
வியாரா தொகுதியை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியாகும். தபி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் இந்தத் தொகுதியில் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களே ஆவர். தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புனஜி கமித் எம்.எல்.ஏவாக இருக்கிறார். 64 வயதான புனஜி கமித் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டை
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே சொல்லப்படும் இந்த தொகுதியில் அக்கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் கிறிஸ்தவரை பாஜக இறக்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் மோகன் கோன்கனியை பொறுத்தவரை சமூக ஆர்வலராக அறியப்படுகிறார். கடந்த 1995- ஆம் ஆண்டு முதல் பாஜகவில் உறுப்பினராக இருந்தாலும் அப்பகுதியில் சமூக ஆர்வலராகவே அறியப்படுகிறார்.

நான் வரலாறு படைப்பேன்
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து தபி மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பொறுப்பை கைப்பற்றினார். பாஜக தனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள கோன்கனி மேலும் கூறியதாவது:- "என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய பாஜக தலைமைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வரும் 1 ஆம் தேதி வியாரா தொகுதியில் நான் வரலாறு படைப்பேன். நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வியாரா தொகுதியில் அரசியல் சூழல் மேம்பட்டுள்ளது" என்றார்.

இந்துத்வா காலம் முடிந்துவிட்டது
பாஜகவின் சிறுபான்மை ஆதரவு நிலைப்பாடு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன் கோன்கனி, "பாஜக ஆட்சியில் என்னால் எந்த ஒரு அதிகாரியிடமும் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இந்துத்வா காலம் முடிந்துவிட்டது. இப்போது சப் கா சாத், சப்கா விகாஸ் காலம் (அனைவரும் இணைவோம், அனைவருக்குமான வளர்ச்சி தான் நடக்கிறது)" என்றார்.

பாஜகவுக்கே நல்ல ஆதரவு?
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 27 பழங்குடியின தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை வசிக்கும் பகுதிகள் ஆகும். இருந்தாலும் பாஜகவுக்கு நல்ல ஆதரவு உள்ளதாகவே அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications