இல்ல.. இல்ல.. நீங்க போங்க.. மோடி வாக்களிக்க சென்ற அந்த நொடி.. வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
காந்திநகர்: குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெண் வாக்காளர் ஒருவரை முதலில் வாக்களிக்க அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் முக்கியமான சில தொகுதிகள் இந்த பட்டியலில் வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தற்போது வாக்களித்து வருகின்றனர்.
குஜராத் சட்டசபை தேர்தல்.. சபர்மதி தொகுதியில் வாக்களித்தார் பிரதமர் மோடி
வாக்குப்பதிவு
காலை ஒன்பது மணி நிலவரப்படி 4.75 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக காந்திநகர் தொகுதியில் 7.05 சதவிகிதமும், இதனையடுத்து மகேசனா தொகுதியில் 5.44 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல மகிசாகரில் 3.76 சதவிகிதமும், பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த அகமதாபாத் தொகுதியில் 4.20 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிரதமர் மோடி அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளியில் வாக்களித்தார். வாக்களிப்பதற்கு முன்னதாக அவருக்கு முன்னாள் மற்றொரு பெண்மணி வாக்களிக்க நின்றுகொண்டிருந்தார். உடனே இவர் பிரதமரை பார்த்ததும் ஒதுங்கி வழிவிட்டு நின்றார். ஆனால் இதனை ஏற்காத பிரதமர் முதலில் நீங்கள் வாக்களியுங்கள் எனும் தொனியில் கைகாட்டினார்.
நெகிழ்ச்சி சம்பவம்
இதனையடுத்து அப்பெண்மணி வாக்களித்து முடித்த பின்னர் மோடி வாக்களித்தார். இந்த சம்பவம் சுற்றியிருந்த வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, படான், பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவலி, மஹிசாகர், பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, ஆனந்த், கெடா மற்றும் சோட்டா உதய்பூர் என 14 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 2.51 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மொத்தம் 61 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர். இதில் 69 பேர் பெண் வேட்பாளர்களாவார்கள். அதேபோல 285 பேர் சுயேட்சை வேட்பாளர்களாவார்கள். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்துடன் அகமதாபாத் தொகுதியில் வாக்களித்தார்.
வாக்களிக்க வேண்டும்
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். பின்னர் அருகில் இருந்த கோயிலில் அவர் குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டார். அதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். பாஜகவுக்கு இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். ஏனெனில் இந்த தேர்தலில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும். எதிர்வரும் 2025ல் ஆர்எஸ்எஸ் தனது 100வது ஆண்டை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது. எனவே இதனை சாத்தியப்படுத்த மத்திய அரசில் பாஜக இருக்க வேண்டியது அவசியம்.
மும்முனை போட்டி
அந்த வகையில் இத்தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதேபோல இந்த முறை வெற்றி பெற்றுவிட்டால் சிபிஎம் சாதனையை பாஜக சமன் செய்துவிடும். அதாவது மேற்கு வங்கத்தில் சிபிஎம் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றி ஆட்சி நடத்தியிருக்கிறது. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுபோல வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாஜக குஜராத்தில் 1995 முதல் 6 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்த முறையும் வெற்றி பெற்றால் சிபிஎம் சாதனை சமன் செய்யப்படும். ஆனால், இம்முறை காங்கிரஸ் மட்டுமல்லாது ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. எனவே வாக்கு வங்கிகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.